Kadhai Alla Nijam

Monday, April 23, 2012

இருக்கிறானா? இல்லையா ?

Mar 2 வாலி கவிதை இருக்கிறானா? இல்லையா ? கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு கண்ணீர் அஞ்சலி... ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி பேறு வேறுண்டோ எனது வாய்க்கு? மாமனிதனின் மாதாவே! - நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை; மடி சுமந்தது நாலு பிள்ளை! நாலில் ஒன்று - உன் சூலில் நின்று - அன்றே தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது! உன் - பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின் கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டுவேன் என்று... சூளுரைத்து - சின்னஞ்சிறு தோளுயர்த்தி நின்றது; நீல இரவில் - அது நிலாச் சோறு தின்னாமல் - உன் இடுப்பில் உட்கார்ந்து உச்சி வெயிலில் - சூடும் சொரணையும் வர சூரியச் சோறு தின்றது; அம்மா! அதற்கு நீயும் - அம்புலியைக் காட்டாமல் வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு, தினச் சோறு கூடவே இனச் சோறும் ஊட்டினாய்; நாட்பட - நாட்பட - உன் கடைக்குட்டி புலியானது; காடையர்க்கு கிலியானது! தம்பி! தம்பி! என நானிலம் விளிக்க நின்றான்- அந்த நம்பி; யாழ் வாழ்- இனம் இருந்தது - அந்த... நம்பியை நம்பி; அம்மா! அத்தகு - நம்பி குடியிருந்த கோயிலல்லவா - உன் கும்பி! சோழத் தமிழர்களாம் ஈழத் தமிழர்களை... ஓர் அடிமைக்கு ஒப்பாக்கி; அவர்களது உழைப்பைத் தம் உணவுக்கு உப்பாக்கி; செம்பொன்னாய் இருந்தோரை - செப்பாக்கி; அவர்கள் வாழ்வை வெட்டவெளியில் நிறுத்தி வெப்பாக்கி; மான உணர்வுகளை மப்பாக்கி; தரும நெறிகளைத் தப்பாக்கி வைத்த காடையரை வீழ்த்த... தாயே உன் தனயன் தானே - தந்தான் துப்பாக்கி! இருக்கிறானா? இல்லையா? எனும் அய்யத்தை எழுப்புவது இருவர்; ஒன்று - பரம்பொருள் ஆள பராபரன்; இன்னொன்று ஈழத்தமிழர்க்கு - அரும்பொருள் ஆன பிரபாகரன்! அம்மா! இந்த அவல நிலையில் - நீ... சேயைப் பிரிந்த தாயானாய்; அதனால் - பாயைப் பிரியாத நோயானாய்! வியாதிக்கு மருந்து தேடி விமானம் ஏறி - வந்தாய் சென்னை; அது - வரவேற்கவில்லை உன்னை! வந்த வழிபார்த்தே - விமானம் திரும்பியது; விமானத்தின் விழிகளிலும் நீர் அரும்பியது! இனி அழுது என்ன? தொழுது என்ன? கண்ணீர் கலப்பைகள் - எங்கள் கன்ன வயல்களை உழுது என்ன? பார்வதித்தாயே! - இன்றுன்னைப் புசித்து விட்டது தீயே! நீ - நிரந்தரமாய் மூடிக்கொண்டாய் விழி; உனக்குத் தங்க இடம் தராத - எங்கள் தமிழ்மண் - நிரந்தரமாய் தேடிக்கொண்டது பழி!

No comments: