Kadhai Alla Nijam

Saturday, November 1, 2008

வான் தாக்குதல்களை சிறப்பாக நடத்திய வான் புலிகளுக்கு "நீலப்புலி", "மறவர்" விருதுகள்: தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு

வான் தாக்குதல்களை சிறப்பாக நடத்திய வான் புலிகளுக்கு "நீலப்புலி", "மறவர்" விருதுகள்: தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு
[சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 06:03 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
எதிரிகள் மீதான வான் தாக்குதலில் சிறப்பாகச் செயற்பட்ட வான் புலிகளின் வானோடிகளுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் போராளிகளுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விருதுகள் வழங்கி மதிப்பளித்துள்ளார்.

பிரத்தியேகமான இடமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளத்தின் மீதான தாக்குதலில் வீரவரலாறான கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி, மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார்.





தொடர்ந்து மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில் விடுதலைப் புலிகளின் வான் புலிகளில் சிறப்பாகச் செயற்பட்ட குறிப்பாக சிறிலங்காவில் உள்ள களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதான தாக்குதல் உட்பட சிறிலங்கா படைய பொருண்மிய இலக்குகள் மீதான தாக்குதல்களை ஐந்து தடவைகளுக்கு மேல் வெற்றிகரமாக நடத்திய வானோடிகளுக்கு "நீலப்புலி" என்னும் சிறப்பு விருதை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார்.





மூன்று தடவைகளுக்கு மேல் வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்திய துணை வானோடிகளுக்கு "மறவர்" விருதையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார்.

அத்துடன் 09.09.2008 அன்று வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீதான தாக்குதலை நடத்திய வான் புலிகளின் வானோடிகளுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணிப் போராளிகளுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சிறப்புப் பரிசில்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், கட்டளைத் தளபதிகள், போராளிகள் உட்பட பெருமளவிலானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.





No comments: