Kadhai Alla Nijam

Tuesday, January 31, 2012

ராஜிவ் கொலை

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடியவர் பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி. அவர் இப்போது ராஜிவ் கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தப் பெறாமல், பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டதை, வெளியே கொண்டுவரும் நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். விரைவில் அந்த நூல் வெளிவரவிருக்கிறது. இது தொடர்பாக ‘டெகல்கா’ வார ஏடு, வழக்கறிஞர் துரைசாமியின் பேட்டியை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பேட்டியின் தமிழ் வடிவம் இது.
கேள்வி : சிவராசன் போபால் நகரத்துக்குப் போனார் என்றும், ‘TAG’க்கு ரூ.1.71 கோடி தந்ததாகவும் உங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளீர்கள். அது என்ன ‘ TAG ’?
பதில்: எனக்கும் தெரியாது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சிவராசன் நாட்குறிப்பில், 1991 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதியிட்ட நாளில் இவ்வாறு சிவராசனால் எழுதப்பட்டிருக்கிறது. இன்னும் தரவேண்டியது ரூ.45,000 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்த நாட்குறிப்பு, அரசு தரப்பு சாட்சி ஆவணம் எண்.எம்.ஓ.180) இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு எந்த விசாரணையும் நடத்தவில்லை. அப்படி நடத்தியிருப்பார்களேயானால், ராஜீவ் கொலைச் சதியில் மறைந்திருக்கும் பல சதிகாரர்களை கண்டறிந்திருக்க முடியும். அப்படி எந்த விசாரணையும் நடக்காமல்போனது வேதனைக்குரியது. இதனால் அப்பாவிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். அந்தப் பணம் காசோலையாக தரப்படவில்லை. ரொக்கமாக வழங்கப்பட்டிருக்கிறது. 1991 மார்ச் 8 ஆம் தேதி சிவராசன் ம.பி. மாநிலத்தில் இருந்ததாக தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.
“மத்திய பிரதேச மாநிலம்
குணா மாவட்டம்
சந்தேரி ஹில்ஸ்
மாளிகை உரிமையாளர்குவாலியர் ராணி
பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளது”
- என்ற குறிப்புகள் சிவராசன் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
மற்றொரு செய்தியையும் குறிப்பிடவேண்டும். 1992 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி ஆதிரை என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆதிரையும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர். சிவராசன் பற்றி தனக்குத் தெரிந்த பல தகவல்களை தெரிவிக்க விரும்புவதாக, மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆதிரை தாக்கல் செய்த மனுவில்:
“நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது சிவராசன் என்பவரை சந்தித்தேன். அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, பிறகு அதிலிருந்து வெளியேறி, அடிக்கடி இந்தியா போய்வந்துகொண்டிருப்பவர். எனவே, இந்தியாவிலிருந்து நான் ஜெர்மனிக்குப் போவதற்கு அவரது உதவியைக் கேட்டேன். நான் இந்தியா வந்து, சிவராசனுடன் தொடர்பு கொண்டேன். அப்போது சிவராசன் என்னிடம், ‘ஒரு குறிப்பிட்ட பணியை காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் ஒப்படைத்துள்ளனர். அதற்காக பெருமளவு பணம் தருவதாகவும், வெளிநாடு ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகவும் உறுதி கூறியிருக்கிறார்கள்’ என்று என்னிடம் கூறினார். இந்த வேலையை செய்து முடிப்பதற்கு, தன்னோடு இணைந்து கொள்ளுமாறும், என்னை கேட்டுக் கொண்டார். நான் மறுத்துவிட்டேன். அதற்குப் பிறகு, அவர் ரகசியங்களை உடைத்து என்னிடம் பேசினார். ‘அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்தில் நிர்வாகியாக உள்ள கல்யாணசுந்தரம், என்னிடம், இந்த வேலையை செய்துமுடிக்குமாறு ஒப்படைத்துள்ளார்’ என்று கூறியதோடு, (ராஜிவ் காந்தி மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் வர இருப்பதாகவும், ஸ்ரீபெரும்புதூரிலேயே அவர் தங்கப் போவதாகவும் தெரிவித்தார். மே 22 ஆம் தேதி (ராஜிவ் கொலை நடந்த அடுத்த நாள்) சிவராசன் என்னிடம் தொடர்பு கொண்டு தாணுவின் உதவியோடு வேலையை செய்து முடித்துவிட்டதாக தெரிவித்தார். என்னிடம் டெல்லியில் கல்யாணராமனை சந்திக்கச் சொன்னார். அவர், எனக்கு ஜெர்மன் போவதற்கான கடவுட் சீட்டு, விசாவை பெற்றுத் தருவார் என்றார்” – ஆதிரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இந்த மனுவை, எவரும் கவனத்தில் கொள்ளவில்லை. ஆதிரை கூறியது உண்மைதானா என்பதைக் கண்டறியும் முயற்சிகளிலும் சி.பி.அய். இறங்கவில்லை. ராஜிவ் சுற்றுப்பயணத் திட்டம் வகுத்தத்திலிருந்து கொலை செய்யப்படும் வரை சதித் திட்டத்தின் பின்னணியாக வெளியே தெரியாத மர்ம நபர்கள் இருந்துள்ளனர்.
கேள்வி: பெங்களூரில் நடந்த கைது நாடகங்களை உங்கள் நூலில் விவரித்துள்ளீர்கள். அவற்றை எல்லாம் ஏன் மக்களிடம் கொண்டு சொல்லவில்லை?
பதில் : நான் இப்போது, அது பற்றி விரிவாகக் கூறுகிறேன். 1991 ஜூலை 29 ஆம் நாள் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவருக்கு, பெங்களூர் காவல்துறை ஒரு தகவலைத் தெரிவித்தது. சிவராசனும் அவரது அணியினர் சுபா உட்பட 7 பேர் பெங்களூர் இந்திரா நகரிலுள்ள வீட்டில பதுங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் தமிழக காவல்துறைக்கு ஏற்கனவே தெரியும். கோவையில் சாலை விதிகளை மீறியதற்காக விக்கி என்பவரை கைது செய்து விசாரித்தபோது அவரே, பெங்களூரில் சிவராசனும், அவரது தோழர்களும் பதுங்கி இருப் பதைக் கூறிவிட்டார். ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழு நடவடிக்கைகளை மேற்கொள்ள நான்கு நாட்கள் தாமதப்படுத்தியது. ஜூலை 29 ஆம் தேதியே நடவடிக்கையில் இறங்கியிருப்பார்களேயானால் அதிரடிப்படை உதவியுடன் சிவராசனை உயிருடன் பிடித்திருக்க முடியும்.
மற்றொரு முக்கிய கேள்வி – சிவராசனுக்கு பெங்களூரில் பாதுகாப்பான வீட்டை பெற்றுத் தருவதற்கு முன்வந்தது யார் என்பதாகும். சிவராசன், விடுதலைப்புலிகளிடம் அந்த அமைப்பில் இருந்த காலத்தில் பயிற்சிப் பெற்றவர் என்பதால், வேதாரண்யம் போய், அங்கிருந்து கடல்வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்லும் வழிமுறைகள் நன்றாகவே தெரிந்திருக்கும். வழக்கத்துக்கு மாறாக அவர், பெங்களூர் சென்றது ஏன்? யாரோ, சிலர், பெங்களூர் பாதுகாப்பாக இருக்கும் என்று சிவராசனுக்கு உறுதி தந்திருக்கிறார்கள். அந்த வீட்டில், சிவராசன் பிணமாகக் கிடந்த இடத்தின் அருகே 9 எம்.எம். கைத் துப்பாக்கி மற்றும் ஏ.கே. 47 துப்பாக்கி கிடந்தது. அந்த ஆயுதங்களை சிவராசனுக்கு வழங்கியது யார்? இது பற்றி சிறப்புப் புலனாய்வுக் குழு எந்த விசாரணையும் நடத்தவில்லை. இறந்து போனவர் நீதிமன்றத்தில் வந்து பேச முடியாது அல்லவா?
கேள்வி : அப்படியானால், சிறப்புப் புலனாய்வுக் குழுவும், காங்கிரசும், கொலைக்குப் பின்னால் நடந்த சதியை மறைப்பதாகக் கூறுகிறீர்களா?
பதில்: ஆம், அப்படித்தான் நான் நம்புகிறேன். ராஜிவ் குண்டுவெடிப்பில் இறந்ததிலிருந்தே சாட்சிகளை முடக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன. இது ஏதோ தற்செயலாக நடந்தவை அல்ல; திட்டமிட்டே நடந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை அரிபாபுவின் கேமிராவைக் கைப்பற்றியது. உடனே கேமிராவின் புகைப்படச் சுருளைக் கழுவிப் பார்த்தால், 5 மணி நேரத்துக்குள்ளேயே கொலையாளிகளைக் கண்டறிந்திருக்கமுடியும். அப்படி எதுவும் செய்யவில்லை. ஆனால், நான்கு நாட்கள் கழித்து இந்த புகைப்படம், மே 25 ஆம் தேதி ‘இந்து’ நாளேட்டில் வெளிவருகிறது. எப்படி கிடைத்தது என்பது மர்மம். அதிலும் அந்தப் புகைப்படத்தில் சிவராசன் உருவம் மறைக்கப்பட்டது. மே 29 வரை சிவராசன் படத்தை ‘இந்து’ வெளியிடவில்லை. இந்த வழக்கில் மிகவும் முதன்மையான சாட்சி, ஆவணம், இந்தப் புகைப்படம்தான். இந்தப் படம், ‘இந்து’ ஏட்டுக்கு எப்படி கிடைத்தது என்பதை, எவருமே ஆராயவில்லை. அதற்குப் பிறகு என்ன நடந்தது? ஸ்ரீபெரும்புதூர் நிகழ்ச்சியை மூன்றுபேர் தனித்தனியாக வீடியோவில் பதிவு செய்தார்கள். அந்த மூன்று வீடியோ பதிவுகளும் சிதைக்கப்பட்டு, காட்சிகள் நீக்கப்பட்டன. இதற்கு சிறப்புப் புலனாய்வுக்குழு தந்த விளக்கம் என்னவென்றால், எதோ தவறுதலாக காட்சிகள் அழிந்துவிட்டன என்பதாகும். புலனாய்வுக் குழுவின் வலிமையே இல்லாத, இந்த விளக்கத்தை என்னால் ஏற்கவியலாது.
கேள்வி : சரி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது ஏன், இதை நூலாக எழுத முன் வந்துள்ளீர்கள்?
பதில்: எனக்கு இப்போது வயது 69. நான் 1970 ஆம் ஆண்டிலிருந்து வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறேன். ராஜிவ் வழக்கை முன்வைத்து ஒரு நூலை எழுத வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. இந்த வழக்கில் பல தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டபோது, அவர்களுக்காக நான் வாதாட முன்வந்தேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டவிரோத காவலில் இருப்பவர்களுக்காக ‘ஆட்கொணரும்’ (ஹேபியஸ் கார்பஸ்) மனுக்களை தாக்கல்செய்தேன். அந்த கட்டத்தில்தான், இந்த வழக்கில் என்னை இணைத்துக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. நான் தாக்கல் செய்த மனுவின் காரணமாக சட்டவிரோத காவலில் இருந்த தி.மு.க.வினர் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர், நளினி தனக்காக வாதாடுமாறு கேட்டுக்கொண்டார். நான் வழக்கை எடுத்துக் கெண்டபோதே இது வெற்றிப்பெறமுடியாத வழக்கு என்று எனக்குத் தெரியும். காரணம், நீதிமன்றமே குற்றம்சாட்டப்பட்டவர்களை தண்டிக்கவேண்டும் என்ற மனநிலையில் இருந்தது. சட்டங்களுக்கு எல்லாம் மேலான சர்வ அதிகாரம் கொண்ட அமைப்பாகக் கருதியே புலனாய்வுத்துறையும் செயல்பட்டது. ஊடகங்களும் மக்கள் மனநிலையும்கூட உண்மைகளை பார்க்காமல், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகவே இருந்தது. நளினி வழக்கில், நான் நேர்நின்றபோது, நாளொன்றுக் ரூ.50 மட்டுமே எனக்கு தருவதற்கு அரசு முன் வந்தது. நான் வழங்கும் சட்ட உதவிக்கு ஓரளவு நேர்மையான ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் முறையீடுசெய்தேன். 8 ஆண்டுகாலம் இந்த வழக்கிற்காக நான் போராடினேன். அனைத்து ஆவணங்களையும், சாட்சியங்களையும் முழுமையாகப் படித்தேன். 266 அரசு தரப்பு சாட்சியங்களையும் படித்தேன். இவை எளிமையான வேலைகள் அல்ல. இந்த காலத்தில் வேறு வழக்குகளில் நான் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு பிரபல வழக்கறிஞராக இருந்த நான், பெரும் தொகையை ஈட்டிருக்கமுடியும். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது, எதிர்நீச்சல் போடவே முடிவுசெய்தேன். இந்த வழக்கிற்காக எனது நேரத்தையும், உழைப்பையும் கடமையாக அர்ப்பணித்த நான், இந்த வழக்கு விசாரணையில் நடந்த முறைகேடுகளை உலகத்தின் பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்று விரும்பியே இந்த நூலை எழுத முன் வந்தேன். 19 அப்பாவிகள் 8 ஆண்டுகாலம் பரோல் கூட மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்கள். அதே நேரத்தில், ராஜிவ் கொல்லப்பட்டதில் எனக்கு இன்றளவும் உடன்பாடில்லை. அதை நான் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
(‘தெகல்கா’ 21.1.2012)

No comments: